ஏ.சி, ஏர்கூலர் உள்ள ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் கீழ்கண்ட விசயங்களை கவனத்தில் கொள்ளுங்கள்!

பகல் முழுக்க கொளுத்தும் வெயில்... இரவில் அது கிளப்பிவிட்ட அனல். ஏர்கண்டிஷனர் அல்லது ஏர்கூலர் இல்லாமல் பெரியவர்களாலேயே தூங்க முடிவதில்லை.

குழந்தைகள் என்ன செய்வார்கள் பாவம்?

ஆனால், குழந்தைகளை ஏ.சி. அல்லது ஏர்கூலர் உள்ள அறையில் தூங்கவைக்கும்போது, பல விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும்.

இதோ, அதற்கான உஷார் டிப்ஸ்களை தருகிறார் குழந்தை நல மருத்துவர் இர.சசிதரன்.

 * ஏ.சி. காற்று குழந்தைகளின் முகத்தில் நேரடியாகப் படுவதுபோல, படுக்க வைக்காதீர்கள்.

ஏ.சி. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், குழந்தைகள் மூச்சுவிடக் கஷ்டப்படுவார்கள்.

பக்கத்தில் படுத்துக்கொண்டிருக்கும் நாமும் தூங்கிவிடுவதால், பிள்ளைகள் மூச்சுவிடச் சிரமப்படுவது தெரியாமலே போய்விடலாம்.

* ஏ.சி.யில் இருக்கும் பில்டரில் சேரும் தூசியை வாரத்துக்கு ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்.

இல்லையென்றால், அதில் இருக்கும் கண்ணுக்குத் தெரியாத தூசிகள், குழந்தைகளின் மூச்சுக்குழாய்க்குள் சென்றுவிடும்.

இந்தத் தூசியை வெளியேற்றுவதற்காக, நுரையீரலானது சளியை அதிகமாக உற்பத்தி செய்ய ஆரம்பிக்கும்.

குழந்தைகளுக்கு அடிக்கடி சளிப் பிடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

*குழந்தைகளுக்கு உடல் டெம்பரேச்சர் மாறுவது பற்றிச் சொல்லத் தெரியாது.

எனவே, சூடான டெம்பரச்சரிலிருந்து சட்டென ஏசி அறைக்குள் அழைத்துச் செல்லாதீர்கள்.

அல்லது, அறைக்குள் நுழைந்ததுமே 16, 17 எனக் குறைந்த டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைக்காதீர்கள்.

* இரவில் காற்று அனலாக இருப்பதால், ஏ.சி. அறைக்குள் நுழைந்ததுமே சட்டை இல்லாமல் வெறும் உடம்புடன் தூங்க குழந்தைகள் ஆசைப்படுவார்கள். அதை அனுமதிக்காதீர்கள்.

கொஞ்சம் வளர்ந்த பிள்ளையாக இருந்தால், நெஞ்சுப் பகுதியையும், மூன்று வயதுக்குள்ளான குழந்தை என்றால், நெஞ்சுப் பகுதியோடு பாதத்தையும் துணியால் மறைத்துத் தூங்க வையுங்கள்.

* ஏ.சி. காற்று சருமத்தை வறண்டு போகச்செய்யும்.

அதுவே, குழந்தைகளுக்குக் கண்களையும் உலர்ந்துப் போகச் செய்யும்.

16 அல்லது 17 டெம்பரேச்சரில் தொடர்ந்து தூங்கும் குழந்தைகளுக்கு, ரெஸ்பிரேட்டரி இன்ஃபெக்ஷன் வரலாம்.

பிறந்த குழந்தையாக இருந்தால், கதகதப்பான அறையில்தான் தூங்க வேண்டும்.

ஏனென்றால், அம்மாவின் வயிற்று டெம்பரேச்சர் 30. அந்த டெம்பரேச்சரில்தான் சில மாதங்களுக்கு முன்புவரை அந்தக் குழந்தை இருந்தது.

எனவே, 23 - 26 டெம்பரேச்சரில் ஏ.சி.யை வைப்பதுதான் குழந்தைகளுக்கும் (பெரியவர்களுக்கும்) ஏற்ற லெவல்.

*போர்வையால் தலையை முழுக்க மூடிக்கொண்டு தூங்கினால் போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது.

அதே கான்செப்ட்தான் ஏ.சி.க்கும்.  ஜன்னல் எனச் சிறு வழியும் இல்லாமல், எல்லாவற்றையும் மூடிவிட்டுத்  தூங்கினால் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்காது.

ஏ.சி.யின் மெக்கானிசம்படி வெளிக்காற்று உள்ளே வந்தாலும், வெளிக்காற்று உள்ளே வருகிறபடி, ஜன்னல் கதவில்  ஒரு சின்ன ஓப்பனிங் வைத்துக்கொள்ளுங்கள்.

அப்போதுதான் குழந்தைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கும்.

இல்லையென்றால், நீங்கள் வெளிவிட்ட காற்றையே குழந்தையும் சுவாசிக்க நேரிடும்.

 * ஏர்கூலர்... கடலோரப் பகுதிகளுக்கு செட்டே ஆகாது.

ஏர்கூலரின் மெக்கானிசம் உலர்ந்த காற்றை ஈரமான காற்றாக மாற்றுவது.

சென்னை கடலையொட்டிய நகரம் என்பதால், ஏற்கெனவே காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்.

அதனால், ஏர்கூலரை பயன்படுத்தும்போது, அறைக்குள் இருக்கும் காற்றில் ஈரப்பதம் அதிகமாகிவிடும்.

இந்தக் காற்றை தொடர்ந்து சுவாசிக்கும் குழந்தைகளுக்கு வீசிங் அல்லது ஆஸ்துமா வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

இந்தப் பிரச்னை வராமல் தவிர்க்க, ஒரு ஜன்னலையாவது திறந்துவைத்துத் தூங்குங்கள்.

இந்த அறிவுரைகள் பெரியவர்களுக்கும் தான்.


இவன்
மரு. இர.சசிதரன் ,
குழந்தைகள்👼 நல மருத்துவர் ,
இராமசந்திரா மருத்துவக் கல்லூரி ,பேருர் ,
அனிதா பேபி கிளினிக் ,
மாங்காடு.

Comments

Popular posts from this blog

The 48-Day Ayyappa Vratham: A Personal Guide to Spiritual Alignment

Sloka of Spiritual Compassion: Arindhum Ariyamalum

Nemili Bala Tripura Sundari Peetam: Where the Divine Dwells as a Child